செய்திகள்
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆளில்லா விமானம் பஞ்சாப்பில் சிக்கியது
ஆயுதங்கள் கடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆளில்லா விமானத்தை அட்டாரி எல்லைப் பகுதியில் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
சண்டிகர்:
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை கடந்த ஞாயிறன்று பஞ்சாப் சிறப்பு காவல் படை கைது செய்தது. அவர்களில் அக்சாதீப், சுபுதீப் என்ற இருவர் காலிஸ்தான் சிந்தாபாத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. அட்டாரி எல்லை அருகே உள்ள மஹாவா கிராமத்தில் ஆளில்லா விமானம் ஒன்றை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கடத்துவதற்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாக கூறினர்.
இதையடுத்து இன்று காலை சிறப்புப்படையினர் அக்சாதீப், சுபுதீப் இருவருடன் மஹாவா கிரமத்திற்கு சென்று, வடிகால் அருகே இருந்த புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆளில்லா விமானத்தை கைப்பற்றியது. இதுவரை பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 7 பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த செவ்வாயன்று பஞ்சாப்பின் டான் டரன் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.