செய்திகள்
டிகே சிவக்குமார்

கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி கோர்ட்

Published On 2019-09-25 13:27 GMT   |   Update On 2019-09-25 13:27 GMT
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது.
புதுடெல்லி :

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.
 
இதுதொடர்பாக, அமலாக்கத் துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் ஆஜரானார். அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

டெல்லி கோர்ட்டு முதலில் டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது. கடந்த 13-ந் தேதி டெல்லி கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதையடுத்து, முன்னாள் மந்திரி சிவக்குமார் திகார் சிறையில அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News