செய்திகள்
மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன - ப.சிதம்பரம் வேதனை
பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ப.சிதம்பரம், அதில் மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 16-ம் தேதி ப.சிதம்பரம்
தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்றுபோல் என்றும் மக்கள் சேவை செய்ய கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி.
பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?
தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.