செய்திகள்
உத்தரகாண்ட் தேர்தல் சீர்திருத்தம் - ஐகோர்ட் உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
உத்தரகாண்ட் மாநில உள்ளாட்சி தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் போட்டியிடலாம் என்னும் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி;
உத்தரகாண்ட் சட்டசபையில் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா-2019 கடந்த ஜூன் மாதம் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஜூலை மாதம் சட்டமாக அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின் படி 2 குழந்தைகளுக்கு (உயிருடன் இருப்பவர்கள்) மேல் உள்ளவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களும், தலித் பிரிவு ஆண்களும் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதேநேரம் தலித் பிரிவு பெண்கள் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்றிருக்க வேண்டும்.
இந்த சட்டத்தை ஏதிர்த்து உத்திரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த பஞ்சாயத்து ராஜ் மசோதா கடந்த ஜூலை 25-ம் தேதி முதல் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. ஆகையால் அதற்கு முன்னர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என உத்தரவிட்டது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கலாம் என உத்தரகாண்ட் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.