செய்திகள்
உயிரிழந்த புறாக்கள்

பட்டினியால் உயிரிழந்த புறாக்கள் - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-09-23 05:13 GMT   |   Update On 2019-09-23 05:13 GMT
ஸ்ரீநகரில் உள்ள மசூதி ஒன்றில் புறாக்கள் பட்டினியால் உயிரிழந்ததாக வைரலாகும் பதிவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



உலக வரலாற்றில் முதல் முறையாக புறாக்கள் உணவின்றி உயிரிழந்துள்ளன, எனும் தலைப்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. பதிவில் புறாக்கள் உயிரிழந்திருக்கும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

வைரல் பதிவில் புறாக்கள் உணவின்றி உயிரிழக்க காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தான் காரணம் என்ற வாக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன. புகைப்படங்கள் ஸ்ரீநகரில் உள்ள ஜமியா மசூதியில் எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையால் பறவைகளுக்கு உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரல் புகைப்படத்தை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஃபேஸ்புக் பதிவு விவரங்களை ஆய்வு செய்ததில் அதன் உண்மை விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி வைரல் புகைப்படங்களில் ஒன்று பிப்ரவரி 7, 2012 இல் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதனை மலேசிய புகைப்பட செய்தியாளரான வசாரி வாசிர் ஜமியா மசூதியில் எடுத்திருக்கிறார். மற்றொரு புகைப்படம் இங்கிலாந்தை சேர்ந்த க்ரியாக் ஹன்னா என்ற புகைப்பட கலைஞர் எடுத்திருக்கிறார். 




இவர் இந்த புகைப்படத்தை ஃப்ளிக்கர் (Flickr) எனும் தளத்தில் ஜூலை 2, 2011 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்திருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை அவர் மான்செஸ்டரில் எடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் புகைப்படம் பல ஆண்டுகள் பழையது என உறுதியாவதோடு, புறாக்கள் இறப்பிற்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு அசம்பாவிதங்கள், வீண் பதற்றமும் ஏற்படுகிறது. சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பதிவுகளின் உண்மை தன்மையை அறியாமல் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதனால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க முடியும்.
Tags:    

Similar News