செய்திகள்
கல்யாண் சிங்

அயோத்தி நிலம் வழக்கு: உ.பி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு

Published On 2019-09-21 17:13 GMT   |   Update On 2019-09-21 17:13 GMT
உத்தர பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை அயோத்தி நிலம் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லக்னோ:

1991 முதல் 1992 வரையினான ஆண்டில் பா.ஜ.க. கட்சி தலைமையிலான உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக செயல்பட்டவர் கல்யாண் சிங். இவர் 2014 முதல் ஆகஸ்ட் 2019 வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார். ஆளுநர் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கல்யாண் சிங் மீண்டும் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.  

இதற்கிடையில், 1992-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியதாக கல்யாண் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் 2017-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் கல்யாண் சிங்கை விசாரிக்க முற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் அவர் ஆளுநராக இருந்ததால் இந்த வழக்கில் இருந்து விலக்கு அளிக்க சட்டத்தில் அனுமதி இருந்தது.

ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவரிடம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. கடந்த 9-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கல்யாண் சிங்கை வரும் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 
Tags:    

Similar News