செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா சந்திப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா, இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
புதுடெல்லி:
மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை, இரண்டு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.
இந்தியா-மங்கோலியா இடையிலான ஆன்மீக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா, இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா மற்றும் அதிகாரிகளுக்கு விருந்தளித்தார்.