செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண விவரம்
நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார்.
புதுடெல்லி:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி வரும் ஞாயிறுக்கிழமை (செப்டம்பர் 22) டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிக்கு பின்னர் இரு நாட்டுத்தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 'தலைமையின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொகுத்து வழங்குகிறார். இந்த கருத்தரங்கில் உலக நாடுகளை சேர்ந்த சிலர் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து, நியார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலகத்தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். ஐ.நா. சபையில் உரையாற்றி விட்டு அன்று இரவே அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.