செய்திகள்
முன்னாள் மந்திரி சின்மயானந்த்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் உடல்நிலை கவலைக்கிடம்

Published On 2019-09-18 10:01 GMT   |   Update On 2019-09-18 10:01 GMT
சட்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
 
இந்த வீடியோ வெளியிட்ட பின்னர் அந்த மாணவி மாயமானார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இது தொடர்பாக மாணவியின் தந்தை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு விசாரணை நடத்தியது.



இதற்கிடையே இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு தயாராக இருப்பதாக சின்மயானந்தாவின் வக்கீல் கூறியிருந்தார். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News