செய்திகள்
அமித் ஷா

நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்

Published On 2019-09-17 20:03 GMT   |   Update On 2019-09-17 20:03 GMT
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
புதுடெல்லி:

டெல்லியில் நேற்று நடந்த அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நமது நாட்டில் ஒரு அங்குல அளவுக்கு அத்துமீறுவதைக்கூட சகித்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் அதை கடுமையாக கையாளுவோம். நமது படை வீரர்களின் ஒரு சொட்டு ரத்தம்கூட வீணாகப்போக விட மாட்டோம்.

எல்லை தாண்டிச்சென்று இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல்கள் மற்றும் விமானப்படை தாக்குதல்களைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை மாறி விட்டது. இந்தியாவின் பலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ஒன்றுபட்ட இந்தியா என்ற நோக்கத்தை அடைவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2014-ம் ஆண்டு மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எங்கு பார்த்தாலும் பெருங்குழப்பம் நிலவியது. எல்லைகளில் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பல கட்சி ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எங்கு பார்த்தாலும் ஏமாற்றம் காணப்பட்டது. ஒவ்வொரு மந்திரியும் தங்களை பிரதமராக கருதினர். பிரதமரை யாரும் பிரதமராக கருதவில்லை.

2014-ம் ஆண்டு மக்கள் அளித்த வரலாற்று வெற்றி, 30 ஆண்டு கால கூட்டணி அரசு என்ற சகாப்தத்துக்கு முடிவு கட்டியது. முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்றது.

பாரதீய ஜனதாவின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில், சரக்கு சேவை வரி விதிப்பு முறை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, ராணுவத்தின் துல்லிய தாக்குதல், விமானப்படை தாக்குதல், ஒரு பதவி ஒரு பென்ஷன் உள்ளிட்ட 50 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இப்போது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 370, 35-ஏ ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இப்படி துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன.

யாரையும் சமாதானம் செய்வதற்கான முடிவுகளை மோடி அரசு எடுக்கவில்லை. மக்கள் நலனுக்காகத்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

எந்தவொரு திட்டத்திலும் தொடக்கத்தில் பிரச்சினைகள் இருக்கும். சரக்கு, சேவை வரி விதிப்பிலும் அந்த வகையில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கின்றன. எதில்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லை? சரக்கு, சேவை வரி விதிப்பில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது இருக்கிறது.

ஆனால் பல முறை, ஒரே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூல் காணப்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனால் முடிவில் நல்ல பலன்களை சீர்திருத்தங்கள் கொண்டு வரும்.

உலகளாவிய பொருளாதார மந்த நிலையினால் தொழில் துறையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. உங்கள் (தொழில் துறை) கஷ்டங்கள் புரிகிறது. உங்கள் சந்தேகங்களும் புரிகிறது. நிச்சயமற்ற தன்மை நிலவலாம். ஆனால் இந்த அரசு உணர்வுபூர்வமான, ஊழலற்ற அரசு.

மோடி அரசில் அரசியல் தலைமைதான் கொள்கை முடிவுகளை எடுக்கிறது. அதை அதிகார வர்க்கம் செயல்படுத்துகிறது.

2024-ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதை நிச்சயம் அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News