செய்திகள்
ஆந்திரா படகு விபத்து - பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
அமராவதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக கோதாவரி ஆறு பாய்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் அருகாமையில் கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத் தலத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் கோதாவரி ஆற்றின் வழியாக 60-க்கும் அதிகமானவர்கள் தனியாருக்கு சொந்தமான படகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
ஆற்றுச்சுழலில் சிக்கிய அந்த படகு கச்சுலூரு பகுதியின் அருகில் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றினர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 12 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியான மேலும் 16 உடல்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 20 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.