செய்திகள்
டிகே சிவக்குமார்

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு - கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு அக்டோபர் 1 வரை நீதிமன்ற காவல்

Published On 2019-09-17 13:41 GMT   |   Update On 2019-09-17 13:41 GMT
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.
 
இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார்.

அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். டெல்லி கோர்ட்டு முதலில் டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது. கடந்த 13-ந் தேதி டெல்லி கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே, டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.



இந்த 4 நாட்கள் போலீஸ் காவலில், 2 நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக டி.கே.சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த முடியவில்லை. அமலாக்கத்துறையினர் இதை காரணம் காட்டி, போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோர்ட்டில் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் சிவக்குமாருக்கு அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது.

மேலும், சிவக்குமாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். டாக்டர்கள் முடிவின்படி அங்கு அனுமதிக்கப்பட்டு அவரது உடல் நலம் தேறியதும் சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், மனு மீதான விசாரணை தொடர்ந்து நாளை நடைபெறும் என உத்தரவிட்டது.
Tags:    

Similar News