செய்திகள்
ராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியும் ஆதரவளித்தன.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தங்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷியிடம் நேற்று நள்ளிரவில் வழங்கினர். இதனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவி மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், ராஜஸ்தான் அரசுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்தாலும் காங்கிரஸ் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரஸ் நம்பகத்தன்மையற்ற கட்சி என்பதை நிரூபித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.