செய்திகள்
கோடலா சிவபிரசாத் ராவ்

ஆந்திரா முன்னாள் சபாநாயகர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-09-16 08:41 GMT   |   Update On 2019-09-16 08:41 GMT
ஆந்திரா முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவ் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஐதராபாத்:

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத் ராவ்.

ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டசபை கட்டிடத்திற்கு மாற்றும் போது ஏராளமான பர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது.

புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். அப்போது பர்னிச்சர் பொருட்களை அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத் தனது வீட்டுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் நான் அந்த பொருட்களை திருடவில்லை. தற்காலிக வளாகத்தில் வைத்தால் அவை சேதமடையும் எனக்கருதி எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என அவர் விளக்கம் அளித்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கோடலா சிவபிரசாத் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோடலா சிவபிரசாத் ஆந்திரா அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்தவர். என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசில் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கோடலா சிவபிரசாத் ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News