செய்திகள்
சித்தரிப்பு படம்

தேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள்

Published On 2019-09-15 10:44 GMT   |   Update On 2019-09-15 12:38 GMT
நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் கற்பழிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.
புதுடெல்லி:

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 882 கற்பழிப்பு மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கி கிடக்கின்றன.

இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றை எல்லாம் விரைவாக விசாரித்து முடித்து, தண்டனை அளிப்பதற்கென்று சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த நீதிமன்றங்களை அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து தொடங்கவும் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.



இந்நிலையில், 767.25 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகையில் 474 கோடி ரூபாயை 'நிர்பயா நிதி’ தொகுப்பில் இருந்து மத்திய அரசு வழங்கும்.

இந்த 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்களில் 634 நீதிமன்றங்கள் ‘போக்ஸோ’ எனப்படும்   சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.

அனைத்து நீதிமன்றங்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 165 வழக்குகளை விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Tags:    

Similar News