திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல் - தாய் பலி, மகன் படுகாயம்
நகரி:
திருவள்ளூரை சேர்ந்தவர் யமுனாபாய் (வயது 50). இவரது மகன் கணேசன் (26). இவர்கள் மோட்டார் சைக்கிளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.
நேற்று நள்ளிரவு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இன்று காலை புத்தூர் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே யமுனா பாய் பரிதாமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த கணேசனை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் ஆந்திரா ரேணிகுண்டாவில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்தார்.
ஸ்ரீகாளஸ்தியில் வீட்டை வாடகைக்கு எடுத்த நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை கம்பெனிக்கு செல்லும் பஸ்சை ராமகிருஷ்ணன் தவற விட்டுவிட்டார்.
இதனால் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் கம்பெனிக்கு சென்றார். அப்போது ஒரு பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த போலீசார் ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.