செய்திகள்
டெல்லி: விநாயகர் சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கி 4 பேர் பலி
டெல்லியில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஆற்று நீரில் மூழ்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளபக்தவார்பூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கிராமமக்கள் இணைந்து நேற்றிரவு அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்க சென்றனர். அப்போது சிலையை கரைக்க ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சிலர் சென்றதால் ஆற்றின் நீரோட்டத்தின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், விநாயகர் சிலை கரைக்கும் போது அடித்துச்செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.