செய்திகள்
ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - அமலாக்கத் துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Published On 2019-09-13 09:50 GMT   |   Update On 2019-09-13 09:50 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்டு 20-ம் தேதி அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது. சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கமாகும், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.



இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க  விரும்பவில்லை. தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News