செய்திகள்
ரபேல் போர் விமானம்

முதல் ரபேல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது

Published On 2019-09-10 16:48 GMT   |   Update On 2019-09-10 17:06 GMT
பிரான்சிடம் கொள்முதல் செய்யும் ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல்கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோர் பங்கேற்கின்றனர். மற்ற விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வரத்தொடங்கும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News