செய்திகள்
இப்ப போடுங்க பார்ப்போம் உங்கள் அபராதத்தை... போக்குவரத்து போலீசாருக்கு சவால் விடும் நபர்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து போலீசாரின் அபராதத்தில் இருந்து தப்பிக்கும் விதமாக ஹெல்மெட்டை சுற்றிலும் அனைத்து ஆவணங்களை ஒட்டிவைத்து தனது பைக்கை இயக்கி வருகிறார்.
அகமதாபாத்:
இந்தியா முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு ரூ.1,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விதிமுறையின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை மீறியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, ஓட்டிய வாகனத்தை விற்றால் கூட கிடைக்காது என்று புலம்பி வருகின்றன. ஒருவர் கோபத்தில் தனது பைக்கை தீ வைத்து எரித்த சம்பவமும் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியை சேர்ந்த ஷா என்ற நபர் ஒருவர் போக்குவரத்து போலீசாரின் அபராதத்தில் இருந்து தப்பிக்க புதுவிதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவர் பைக் லைசன்ஸ், இன்சூரன்ஸ், பைக் உரிமம் உள்பட அனைத்து ஆவணங்களையும் தனது பைக் ஹெல்மெட்டை சுற்றிலும் ஒட்டி வைத்துள்ளார்.
பைக் ஓட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் ஹெல்மெட்டில் ஒட்டி வைத்திருப்பதால் தனக்கு இதுவரை எந்த போக்குவரத்து போலீசாரும் அபராதம் விதிக்கவில்லை என ஷா கர்வத்துடன் தெரிவித்தார்.