செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் கொடிகள்

டி.கே.சிவக்குமார் கைது: கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம்

Published On 2019-09-03 17:33 GMT   |   Update On 2019-09-03 17:33 GMT
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் நிதி மந்திரி டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து நாளை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூர்:

கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2017, ஆகஸ்டில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது வருமான வரி சோதனையின் போது டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.



இது சம்பந்தமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதற்கிடையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை தலைநகர் டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கர்நாடகம் முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Tags:    

Similar News