செய்திகள்
இந்திய வீரர் ஹேம்ராஜ் ஜாட்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்

Published On 2019-09-02 10:16 GMT   |   Update On 2019-09-02 10:16 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை  நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர்.

இருதரப்பினருக்கும் இடையில் அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹேம்ராஜ் ஜாட்(23) என்பவர் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த வீரர் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள படூன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News