செய்திகள்
நீதிமன்றம் வாசலில் ப.சிதம்பர்ம் (கோப்பு படம்)

ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. விசாரணை காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு

Published On 2019-09-02 08:55 GMT   |   Update On 2019-09-02 10:34 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்தது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
 
அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது விசாரணைக் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து 26ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



அப்போதும், சி.பி.ஐ. தரப்பில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்நிலையில், சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததால் கடந்த மாதம் 30-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.ஐ. தரப்பினர், இன்னும் விசாரணை நடத்த உள்ளதால் சிபிஐ காவலை மேலும் 5 நாள் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

சி.பி.ஐ. காவல் குறித்த வழக்கு செப்டம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால் சி.பி.ஐ. காவலில் இருக்க தயார் என சிதம்பரம் தரப்பினர் தெரிவித்தனர்.இதையடுத்து, ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், சிதம்பரத்தை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

சிதம்பத்தின் விசாரணை காவலை இனியும் நீட்டிக்க கூடாது. அப்படியே விசாரணை காவலை நீட்டித்தாலும் அவருக்கு தற்போது 74 வயதாவதால் திகார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட கூடாது. வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்குமாறு அனுமதி அளிக்க வேண்டும் என இன்று கபில் சிபல் வாதாடினார்.

இதுகுறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அணுகி முறையிடுமாறு அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி வரை மேலும் 3 நாட்கள் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

இன்று பிற்பகல் ப.சிதம்பரம் மீண்டும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள நிலையில் அந்த நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டால் அவரை திகார் சிறைக்கு அனுப்ப கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Tags:    

Similar News