செய்திகள்
இது அமேசான் காட்டில் நடந்ததா? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி
சிம்பான்ஸி ஒன்று தீயணைப்பு வீரர் ஒருவரின் காலை கட்டி பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் அமேசான் காட்டில் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து பார்ப்போம்.
அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.
காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சிம்பான்ஸி ஒன்று தீயணைப்பு வீரர் ஒருவரின் காலை கட்டி பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது அமேசான் காட்டில் நடந்த சம்பவம் என்று செய்திகள் பரவ தொடங்கின.
இந்நிலையில், இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், இது அமேசான் காட்டில் எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதன்மூலம் இது தீயில் சிக்கி தவிக்கும் அமேசான் காட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதுபோன்று வைரலாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.