செய்திகள்
கட்சிக்கொடி நிறத்தில் அரசு அலுவலகங்கள் - ஜெகன்மோகனுக்கு பாஜக கண்டனம்
ஆந்திராவில் அரசு அலுவலகங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக் கொடியின் நிறம் அடிக்கப்பட்டு வருவதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
அமராவதி:
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி அசத்தியது. ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இதற்கிடையே, அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், கிராமங்களில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக அனைத்து கிராமங்களிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
கிராமங்களில் கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக திட்ட கட்டிடங்களுக்கு ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் அரசு அலுவலகங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக் கொடியின் நிறம் அடிக்கப்பட்டு வருவதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் லன்கா தினகரன் கூறுகையில், ஜெகன்மோகன் ரெட்டி அரசு மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டினார்.