செய்திகள்
கேரளா வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன்? - பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன்? என பிரதமருக்கு வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:
கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களை சில வாரங்களுக்கு முன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளாவின் வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிலையில், கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன்? என பிரதமர் மோடிக்கு வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டியர் மிஸ்டர் மோடி அவர்களே, நீங்கள் குருவாயூருக்கு வருகை தந்த பின்பு, கேரளா பெரும் வெள்ளத்தை சந்தித்தது. வெள்ள பாதிப்பை உடனடியாக பார்வையிடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் நீங்கள் இதுவரை வெள்ளத்தை பார்வையிட வரவில்லையே ஏன்?
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும். இதேபோல் வெள்ளம் பாதித்த மற்ற மாநிலங்களிலும் நிவாரணம் வழங்கவேண்டும். இது நியாயமற்றது என பதிவிட்டுள்ளார்.