செய்திகள்
வெங்கையா நாயுடு

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்கமுடியாத பதிலடி கொடுக்கப்படும் - வெங்கையா எச்சரிக்கை

Published On 2019-08-28 12:35 GMT   |   Update On 2019-08-28 12:35 GMT
இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
அமராவதி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை.  வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தினர். நாம் யாரையும் தாக்கவில்லை.

ஆனால், யாரேனும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத வகையில் நமது பதிலடி இருக்கும்.

நமது அண்டை நாடுகளில் ஒன்று தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு உதவி செய்கிறது, நிதி வழங்குகிறது மற்றும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.  

மனித குலத்திற்கு சேதம் விளைவிக்கிறோம் என்பது பற்றியும், வருங்காலத்தில் இந்த சேதம் அவர்களுக்கே திரும்பும் என்றும் உணராமல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட நாம் விரும்பவில்லை.  அதேபோல், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசி நமது உள்நாட்டு விவகாரத்திலும் வேறுயாரும் தலையிடக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News