செய்திகள்
வைரல் முகநூல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

காஷ்மீரில் பெண்களை போலீசார் அத்துமீறி தாக்கினரா? வைரல் பதிவின் உண்மை பின்னணி

Published On 2019-08-28 03:13 GMT   |   Update On 2019-08-28 03:13 GMT
காஷ்மீர் பெண்களை மற்றும் குழந்தைகள் மீது போலீசார் அத்துமீறி தாக்கும் வைரல் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறி பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வைரலான இதுதொடர்பான பதிவில், முகத்தை மூடியவாறு, போலீஸ் என பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த சிலர் கையில் தடியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது காஷ்மீரில் நடைபெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இந்த வீடியோ பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இது காஷ்மீரில் நடக்கவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் எடுக்கப்பட்டதாகும். சிந்த் மாகாண காவல்துறையினர் மீது அவதூறு பரப்ப சிலர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ சிந்த் மாகாண போலீசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மே 11ந் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த வீடியோ காஷ்மீரில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். 

போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும். 
Tags:    

Similar News