செய்திகள்
ப சிதம்பரம்

5 நாள் சிபிஐ காவல் முடிவடைவதால் ப. சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்

Published On 2019-08-26 02:12 GMT   |   Update On 2019-08-26 02:41 GMT
5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
புதுடெல்லி :

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று மாலை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அப்போது, ப.சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சி.பி.ஐ. தரப்பு கேட்டுக்கொண்டால் ப.சிதம்பரம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்படும். காவலை நீட்டிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்படவில்லை என்றால், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்.

இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. அத்துடன் ப.சிதம்பரத்தை கைது செய்யவும், சி.பி.ஐ. காவலில் வைக்கவும் தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இதேபோல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை இன்று (26-ந் தேதி) வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனுவும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 
Tags:    

Similar News