செய்திகள்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா

காஷ்மீரில் ஜனநாயக உரிமை பறிப்புதான் மிகப்பெரிய தேசவிரோதம் - பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2019-08-25 21:25 GMT   |   Update On 2019-08-25 21:25 GMT
காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக சொல்கிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை பறித்ததுதான் மிகப்பெரிய தேசவிரோதம் என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:

காஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அக்குழு டெல்லிக்கே திரும்பி வந்தது.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய விமானத்தில் ராகுல் காந்தி பயணித்தபோது, அவரிடம் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண், தானும், தன் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகளை முறையிட்டுள்ளார். இந்த வீடியோ படம் வெளியாகி உள்ளது.

இது எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது? ‘தேசியம்’ என்ற பெயரில், காஷ்மீரை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் வாய் மூடப்படுகிறது, அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அவர்களில் அந்த பெண்ணும் ஒருவர்.

காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளையும் பறித்ததை விட பெரிய அரசியலோ, தேசவிரோதமோ வேறு இல்லை.

ஜனநாயக உரிமை பறிப்பை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நாங்கள் குரல் கொடுப்பதை நிறுத்த மாட்டோம்.

இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.
Tags:    

Similar News