செய்திகள்
ப சிதம்பரம்

ப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா?

Published On 2019-08-25 11:11 GMT   |   Update On 2019-08-25 11:11 GMT
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைவதால் முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை தெரிந்து விடும்.

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். மறுநாள் சி.பி.ஐ தனி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினார்கள். அப்போது சி.பி.ஐ தரப்பில் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு சிதம்பரம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். ப.சிதம்பரத்தை வருகிற 26-ந்தேதி (நாளை) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து ப.சிதம்பரத்தை அதிகாரிகள் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நிதி முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இதற்கு அவர் சரியான பதில்கள் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைகிறது. அதன்பின் அவரை அதிகாரிகள் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துகிறார்கள்.

அப்போது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி அவர்கள் மேலும் காவல் நீட்டிப்பு கேட்கவில்லை என்றால் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க உத்தரவிடுவார். அதன்படி அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார்.

டெல்லி கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இநத மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஜாமீன் அப்பீல் மனு விசாரணையை 26-ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.

இதையடுத்து ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடக்கிறது. இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தால் விடுதலை ஆவார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிவிடும்.

Tags:    

Similar News