செய்திகள்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனுமீது செப்-3ல் உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனுக்கள் மீது செப்டம்பர் 3ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தங்களை கைது செய்வதற்கு தடை விதிக்க இருவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய தடை விதித்து அதை பல தடவை கோர்ட்டு நீட்டித்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு பிறப்பிக்கிறோம். அதுவரை கைது செய்வதற்கான தடை நீடிக்கப்படுகிறது என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.