செய்திகள்
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா?
கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானப் படைக்கு சொந்தமான ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இவ்வழக்கில் விமானப்படை அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுபோட்டு அழித்தன. அதன் மறுநாள், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.
இந்த பதற்றமான சூழலில், காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே இந்திய விமானப்படையின் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 பேரும் பலியாகினர். ஆனால், அந்த ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு அமைப்பினால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவ்வழக்கில் 5 விமானப்படை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அலட்சியத்தினாலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாலும் தவறுதலாக இந்த ஹெலிகாப்டரை சுட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ராணுவ தளத்தை நோக்கி ஏவுகணை வருவதாக தவறாக எண்ணியுள்ளனர்.
"ஒரு குழு கேப்டன், இரண்டு விங் கமாண்டர்கள் மற்றும் இரண்டு விமான லெப்டினன்ட்கள் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள், விமானப்படை விசாரணை நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்," என தகவல்கள் வெளியாகியுள்ளன.