செய்திகள்
மேல்சபை எம்பியாக பொறுப்பேற்ற மன்மோகன் சிங்

மேல்சபை எம்.பி.யாக மன்மோகன் சிங் பதவி ஏற்றார்

Published On 2019-08-23 08:41 GMT   |   Update On 2019-08-23 08:41 GMT
மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

அசாம் மாநிலத்தில் இருந்து 5 முறை மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவரை மீண்டும் எம்.பி. ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது எந்த மாநிலங்களிலும் மேல்சபை எம்.பி. பதவி காலியாக இல்லை.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் மேல்சபை எம்.பி.யாக இருந்த மதன்லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஒரு இடத்தினை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் மன்மோகன்சிங் நிறுத்தப்பட்டார்.

அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் மன்மோகன்சிங்கை எதிர்த்து பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் மன்மோகன்சிங் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிரமிள்குமார்மாத்தூர் வெளியிட்டார்.


மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன்சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் மற்றும் ஆனந்த் சர்மா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News