செய்திகள்
உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரித்த 3 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மஹோபா:
உத்தர பிரதேச மாநிலத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ளது ராயன்பூர். குடியிருப்பு பகுதிகள் அதிகம் நிறைந்த அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தயாசங்கர், ஜெய்ஹிந்த், ஹரிஷ் என்கிற மூவர் வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் அவர்களது நடவடிக்கைகள் பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், அவர்கள் சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஆயுதங்களும் அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் அதிக அளவில் கைப்பற்றினர். இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆயுதங்கள் யாருக்கு விற்கப்படுகின்றன, பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.