செய்திகள்
ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல்
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அமைதியாக இருப்பது அவரது உரிமை. ஆனால் முக்கியமான கேள்விகளை தவிர்ப்பது ஒத்துழையாமைதான். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே ஐ என் எக்ஸ் மீடியா பற்றிய சதியின் உண்மைகள் வெளிவரும் என தெரிவித்தனர்.