செய்திகள்
வெங்காயம்

வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை பாயும் - மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2019-08-22 01:32 GMT   |   Update On 2019-08-22 01:32 GMT
வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வெங்காய உற்பத்தியில் முன்னணியில் உள்ள மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கடும் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதன் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தை நேற்று அதிரடியாக கூட்டி வெங்காய விலை நிலவரம் குறித்து ஆய்வு செய்தது.

இந்த கூட்டத்துக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் அவினேஷ் கே.ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார். நபெட், என்.சி.சி.எப். உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதின் அவசியம் குறித்து ஆராயப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News