செய்திகள்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை என தெரிவித்தார்.
புதுடெல்லி:
முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு இன்று இரவு 8.15 மணிக்கு வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.
அரசியல் சட்டப்பிரிவு 21 குடிமகனின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. பொய்யர்களால் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
ஜனநாயகம், சுதந்திரத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். நாம் சுதந்திரத்துக்காக போராடினோம். சுதந்திரத்தைக் காக்க போராடி வருகிறோம்.
7 மாதங்களுக்கு பிறகு எனது ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது. இதையடுத்து எனது வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் என்றார்