செய்திகள்
ராகுல் காந்தி

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி தாக்கு

Published On 2019-08-21 08:45 GMT   |   Update On 2019-08-21 08:45 GMT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
புது டெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். நான்கு முறை சென்றும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர்.  தற்போது ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.



இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மோடியின் அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் முதுகெலும்பு இல்லாத ஊடகத்தின் பிரிவுகளின் துணையோடு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க பயன்படுத்துகிறது. இப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக  ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ‘எம்.பி,  நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார்.

அவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.  உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News