செய்திகள்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் வீட்டில் இல்லை- மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பிய சிபிஐ அதிகாரிகள்

Published On 2019-08-21 03:15 GMT   |   Update On 2019-08-21 03:15 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ப.சிதம்பரம் வீட்டிற்கு இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ தீவிரமாக இறங்கியது. முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து நேற்று மாலை, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். ஆனால் ப.சிதம்பரம் அங்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர் எங்கு சென்றார் என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.



இதையடுத்து மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். அப்போதும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால், சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பினர். அந்த நோட்டீசில்  ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பினர். 

இந்நிலையில், இன்று காலை மீண்டும் ப.சிதம்பரத்தின் வீட்டிற்குச் சென்றனர். இதனால் ப.சிதம்பரம்  இல்லத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஆனால், சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Tags:    

Similar News