செய்திகள்
பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள் - கேஎஸ் அழகிரி
பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று மாலை டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அப்போது ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. எனவே, சிதம்பரம் ஆஜராவதற்கான சம்மன் அளித்த அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்...? பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது. மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்.
பாஜகவினர் மட்டும் தான் அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர். பாஜக அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக விடப்படும் அச்சுறுத்தலை ப.சிதம்பரம் சமாளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகிறது. இதை சட்டரீதியாக ப.சிதம்பரம் சந்திப்பார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.