செய்திகள்
ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட் அதிரடி

Published On 2019-08-20 10:00 GMT   |   Update On 2019-08-21 03:17 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்.
புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார்.

இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் உள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு மேல் முறையீட்டு நடவடிக்கைகளுக்காக 3 நாள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News