செய்திகள்
நிலவுப் பயணத்தில் இது முக்கியமான நடவடிக்கை- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து
சந்திராயன்-2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் இன்று நிலவை நெருங்கி உள்ளது. பூமியில் இருந்து புறப்பட்டு புவி வட்டப்பாதையில் சுற்றிய விண்கலம், கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்ட நிலையில், இன்று காலை நிலவின் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தமைக்காக இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள். நிலவுக்கான மைல்கல் பயணத்தில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இந்த திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று அடுத்து செப்டம்பர் 2-ம் தேதி, விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரியும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.