திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின
திருமலை:
ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி 82 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும்.
அதில் 2 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் பாதுகாத்து பராமரிக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில் பலவித அபூர்வ விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
திருமலை- திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் இங்கு மரங்களை வளர்த்து காடுகளை பாதுகாக்கவும், விலங்குகளை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் வனத்துறையினர் 2 ஆயிரத்து 700 ஹெக்டேர் வனப்பகுதியில் இரவிலும், படம் பிடிக்ககூடிய நவீன தானியங்கி கேமராக்களை வைத்துள்ளனர்.
இந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அதில் அபூர்வமான அழிந்து வரும் இனமான 4 கொம்பு மான் இருந்தது தெரியவந்தது.
இதுதவிர புனுகுப்பூனை, இந்திய காட்டு நாய், சாம்பல் நிற காட்டுக்கோழி, சிறுத்தை, கீரி, முள்ளம்பன்றி, சாம்பார் மான், சோம்பல் கரடி, ஆகிய அரிய வகை விலங்குகள் இந்த வனப்பகுதியில் இருப்பது அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது.
திருமலையையொட்டி உள்ள சேஷாசலம் வன பகுதியில் வன உயிரினங்களின் நடமாட்டம் எங்கு உள்ளதோ அங்கு அந்த வன உயிரினங்ளின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்களாகவோ அல்லது வண்ண ஓவியமாகவோ வரைந்து பக்தர்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், விழிப்புணரவு ஏற்படுத்தியும் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக தேவஸ்தான வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.