செய்திகள்
ராஜீவ் காந்தியுடன் ராகுல் காந்தி

அன்பு, மன்னிக்கும் குணம் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்... -ராகுல் காந்தி உருக்கம்

Published On 2019-08-20 07:23 GMT   |   Update On 2019-08-20 07:23 GMT
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புது டெல்லி:

ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளான இன்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்திக்கு, அவரது பிறந்தநாளான இன்று, என் மரியாதையை செலுத்துகிறேன்’ என ராஜீவ் காந்தியை நினைவுக் கூர்ந்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று நாம் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தேசப்பற்று மிக்கவரான ராஜீவ் காந்தி தனது தொலைநோக்கு பார்வையாலும், கொள்கைகளாலும் இந்தியாவை கட்டமைக்க உதவினார்.



எனக்கு எப்போதும் அன்பான தந்தையாக இருந்து, யார் மீதும் வெறுப்புணர்வை காட்டாமல், மன்னிப்பு வழங்கவும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கான ராஜீவ் காந்தியின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த சாதனை வீடியோ தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘இந்தியா முழுவதும் இந்த வாரம் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழாவினை கொண்டாட உள்ளோம். இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராஜீவ் காந்தியின் துறைச் சார்ந்த சாதனையை எடுத்துரைக்க உள்ளேன். முதலாவதாக தொழில்நுட்பத்தில் அவரது புரட்சி’ என குறிப்பிட்டிருந்தார். 
Tags:    

Similar News