செய்திகள்
யமுனை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்- கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

Published On 2019-08-19 06:18 GMT   |   Update On 2019-08-19 06:18 GMT
யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி:

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று வெள்ளம் அபாய அளவைத் தாண்டியது. அரியானாவின் ஹதினி குந்த் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8.28 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருப்பதாலும், கனமழை பெய்வதாலும் யமுனை ஆற்றில் 204.7 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர்மட்டம் நாளை 207 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று மாலை வெள்ளம் அதிகரிக்க தொடங்கியபோதே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 



இன்று வெள்ளம் அபாய அளவைத் தாண்டியிருப்பதால், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
Tags:    

Similar News