செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பக்கிச் சூட்டில் இந்திய படைவீரர் லான்ஸ் நாயக் சந்தீப் தாபா (35), படுகாயம் அடைந்து உயிரிழந்தார். விசாரணையில் அவர் டேராடூனை சேர்ந்தவர் என தெரிய வந்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதலில் கடந்த மாதம் காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் கைக்குழந்தை ஒன்றும் பலியானது நினைவிருக்கலாம்.