செய்திகள்
கோப்புப்படம்

தண்ணீர் செலவை மிச்சப்படுத்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்

Published On 2019-08-14 10:09 GMT   |   Update On 2019-08-14 10:09 GMT
தெலுங்கானாவில் தண்ணீர் செலவை மிச்சப்படுத்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரி:

தெலுங்கானா மாநிலத்தில் மெதக் என்ற நகரம் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு உள்ள மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

ஆழ்குழாய் கிணறு வறண்டதால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகியது.

பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதாக தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி கூறினார். மாணவிகளுக்கு தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாக கருதினார்.


இதையடுத்து அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட உத்தரவிட்டார். இதனால் அனைவருக்கும் ‘கிராப்பு’ கட்டிங் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் வந்தனர். அப்போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News