செய்திகள்
ராகுல் காந்தி -பிரதமர் மோடி

நிலச்சரிவு இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் - பிரதமருக்கு ராகுல் கடிதம்

Published On 2019-08-13 17:08 GMT   |   Update On 2019-08-13 17:08 GMT
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகி விட்டனர்.

இதையடுத்து, வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டார். நிலச்சரிவு ஏற்பட்ட கவளப்பாறை பகுதிக்கு சென்று நிலச்சரிவின் பாதிப்புகளை பார்வையிட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அரசு முன்கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்டகால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News