செய்திகள்
கேரளாவில் பழமையான பெக்கால் கோட்டை கண்காணிப்பு கோபுரம் சேதம்
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெக்கால் கோட்டையின் கண்காணிப்பு கோபுரத்தின் சுவர் சேதமடைந்துள்ளது.
காசர்கோடு:
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள புகழ்பெற்ற பெக்கால் கோட்டையின் கண்காணிப்புக் கோபுரத்தின் சுவர் சேதமடைந்துள்ளது.
பெக்கால் கோட்டை கேளடி சிவப்ப நாயக்கர் என்பவரால் கி.பி. 1650 ம் ஆண்டு கட்டப்பட்டது. அரபிக்கடல் ஓரம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டையானது கேரளா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய கோட்டையாகும். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டையின் நுழைவுப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கோபுர சுவர்களில் ஒன்று நேற்று இரவு சேதமடைந்துள்ளது.
369 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டை கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தளமாக இருந்து வருகிறது. கோட்டையின் கண்காணிப்பு கோபுர சுவர் சேதம் ஏற்பட்டிருப்பதால், தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.